சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கலையொட்டி, மதுரை உள்பல பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற உள்ளது. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டும், நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் சிறப்பாக நடைபெற்றன. இதுமட்டுமின்றி திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த  ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த திரு.இரா.அரவிந்தராஜ் (வயது 24) த/பெ திரு.இராஜேந்திரன் என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ண கோன்பட்டியை சேர்ந்த திரு. அரவிந்த் (வயது 25) த/பெ மாரிமுத்து என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்‌. இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.