சென்னை: தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் கருவி வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள  575 சார்பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்வதை எளிமையாக்கும் வகையில்,  ஆவணதாரர் பெயருடன் டோக்கன் எண் தெரிவிக்கும் கருவி வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம்  வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் குறித்த பத்திரப்பதிவு நடைபெறுகிறது. தற்போதைய நவீன யுகத்திற்கு ஏற்க ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவுகள்  செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்ய ஏராளமானோர் கூடுவதால் பரபரப்பு ஏற்படுகிறது மேலும் சர்ச்சைகளும் உருவாகிறது.

இதையடுத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் எந்த தேதியில் பத்திரம் பதிவு செய்ய விரும்புகிறார்களோ அந்த தேதியை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்யும் வகையிலான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு  இணைய வழியாக டோக்கன் வழங்கப்படுகிறது.  அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள்  சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், டோக்கன் எண் அங்குள்ள கருவியில் டிஸ்பிளே ஆகும். அப்போது அந்த எண் உள்ளவர்கள் பத்திரப்பதிவுக்கு அழைக்கப்படுவார்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள டோக்கன் டிஸ்பிளே டோக்கன் எண் மட்டுமே பார்க்க முடிவதால் அதில்  குழப்பம் நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, மேம்படுத்தப்பட்ட டோக்கன் டிஸ்பிளே காட்சி கருவிகள் வாங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்காக   ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,  575 சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாள வில்லை காட்சிக்கருவியில் (token display unit) ஆவணதாரர் பெயரும் காட்சிப்படுத்தப்படும் முறை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப் படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, எல்காட் நிறுவனம் மூலம் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.2.45 கோடிக்கு காட்சி கருவியும் வாங்கப்படுகிறது. இந்த காட்சி கருவியை 4 ஆணடுகள் வரை எல்காட் நிறுவனம் பராமரிக்கிறது. இதற்காக, ரூ.89 லட்சம் தரப்படுகிறது. அதற்கு பிறகு 5 ஆண்டுகளில் 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் அதில் இருந்து தரப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.