டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான,  100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு பெறப்பட்ட ஆர்டிஐ தகவலில் தமிழகத்தில் மட்டுமே ரூ.4200 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது குறைவாக காட்டப்பட்டுள்ளது,  தணிக்கை அறிக்கையிலும் முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் ரூ .935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதுடன்,  தமிழ்நாட்டில் மட்டும் ரூ .245 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் ஒருவர் மீதுகூட வழக்கு பதிவு செய்யப்படாத அவலமும் நடைபெற்றுள்ளது.

வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள், பட்டியலின, பழங்குடி மக்களின் நல்வாழ்விற்காகவும் பொருளாதார மேம்பாடு அடையவும் கிராமங்கள் தன்னிறைவு அடையவும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இந்ததிட்டத்தின்படி, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு தேவையான நிதி,  மத்திய அரசு மூலம்  நேரடியாகக் கிராம மக்களுக்குச் சென்றடைகின்றது.

இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் 100 சதவிகிதம் மனித சக்தியை மட்டும் பயன்படுத்திக் கட்டடங்கள் கட்டுதல், ஏரி, குளம், குட்டை, ஓடை, கண்மாய் போன்ற நீர் நிலைகளைத் தூர் வாருதல் மற்றும் தனிநபர் இடங்களில் கால்நடை கொட்டகை அமைத்தல், விவசாய நிலங்களில் விவசாய வேலை செய்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், மரம் நடுதல், கழிவறை கட்டுதல் போன்ற வேலைகள் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் (MGNREGA)  திட்டங்களின் கீழ் இந்தியா முழுவதும்  ரூ .935 கோடி நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதை அரசாங்கத்தின் தணிக்கை தரவுகள் தெரிவித்துள்ளன. முறைகேடான நிதியை திரும்ப பெறுவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளதும், இதுவரை, சுமார் ரூ.12.5 கோடி மட்டுமே அதாவது 1.34% – இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்பதையும் தரவுகள் உறுதி செய்துள்ளன..

ஊரக வளர்ச்சித் துறைகளின் (RDD) கீழ் உள்ள சமூக தணிக்கைப் பிரிவுகள் (SAU)  நடத்திய தணிக்கையில் இந்த முறைகேடு தெரிய வந்துள்ளது. இது, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மேலாண்மை தகவல் அமைப்பு (எம்ஐஎஸ்) மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

2017-18ம் ஆண்டுமுதல்  இந்த திட்டம் (MGNREGA)  தொடர்பான தரவுகள் பதிவேற்றப் பட்டுள்ளது. அன்றுமுதல் தற்போது வரையிலான கடந்த 4 ஆண்டுகளின் அதன் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை பிரிவு (SAU- Social Audit Unit) ஆய்வு செய்தது.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் (Gramma Panchayat) சமூக தணிக்கைப் பிரிவுகள் தணிக்கை மேற்கொண்டது.

தணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,

MGNREGA திட்டத்துக்காக மத்தியஅரசு கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ .55,659.93 கோடியை ஒதுக்கியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை அதிகரிக்கப்பட்டு ரூ.1,10,355.27 கோடியை எட்டி 2020-21-ல் மேலும் அதிகரித்துள்ளது.

இத்திட்டத்தின் மொத்த செலவு 2017-18ல் ரூ .63,649.48 கோடியாக இருந்தது. ஆனால், 2020-21ல் அது, ரூ.1,11,405.3 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து  தீவிரமாக ஆய்வு செய்த தணிக்கைஅதிகாரிகள், இந்த திட்டத்தில் மாபெரும் நிதி முறைகேடு நடத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

லஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயரில் பணப் பட்டுவாடா, அதிக விலைக்கு வாங்கப்பட்ட பொருட்கள், விற்பனையாளர்களுக்கு அதிக பணம் செலுத்துதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, மத்திய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் நாகேந்திரநாத் சின்ஹா  அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சமீபத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப வசூலியுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ஏன் இவ்வளவு குறைந்த தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தகவலை  அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்த திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் குற்றத்தை தீர்மானிப்பது – மற்றும் இதுபோன்ற வழக்குகளைக் கையாள நிலையான இயக்க செயல்முறை  (SOP) கள் இல்லாத நிலையில், முறைகேடான பணத்தை வசூலிப்பதில் சிக்கல் நீடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும்,  மீட்கக்கூடிய தொகையாகக் காட்டப்படும் தொகையை உறுதிப்படுத்த போதுமான நபர்கள் இல்லை, உண்மையில், பல மாநிலங்களில் முறைகேடாக எந்த பொறுப்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MGNREG சட்டத்தின் பிரிவு 17ன்படி,  கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து வேலைகளையும் சமூக தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது. திட்ட விதிகளின் தணிக்கை 2011ல் அறிவிக்கப்பட்டது, மற்றும் 2016 ல் சமூக தணிக்கைக்கான தணிக்கை தரநிலைகள். ஊரக வளர்ச்சி அமைச்சகம் நிதி மேலாண்மை குறியீட்டை வெளியிட்டுள்ளது, இதில் சமூக தணிக்கை என்பது நிதிகளை நிர்வகிப்பதில் மாநிலங்களின் செயல்திறனை தீர்மானிக்க ஒரு முக்கிய அளவாக கருதப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு  விதிகளின்படி,  ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ம், MGNREGA திட்டத்தின்  கீழ் செய்யப்படும் சமூக தணிக்கையை மாநில அரசு எளிதாக்கும் என்று கூறுகிறது.

ஆனால், ‘உண்மையான’ முறைகேடு அடையாளம் காணப்பட்ட தொகையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பல கிராம பஞ்சாயத்துக் களில், தணிக்கை ஒரு முறை மட்டுமே செய்யப்பட்டது.

2020-21 இல், பதிவேற்றப்பட்ட தரவு குறிப்பிடத்தக்கதாக இல்லை, ஏனெனில் ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில், ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்பட்டது மற்றும் தரவை பதிவேற்ற எந்த ஏற்பாடும் இல்லை என்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக சமூக தணிக்கைப் பிரிவின்  தரவுகளில்  பாதி சுயாதீனமானவை அல்ல  என்று கூறியிருப்பதுடன், தணிக்கையின் தரம் மற்றும் நடவடிக்கைகளின் தீவிரம் மேம்படுத்தப்பட வேண்டும்  என்றும் சமூக தணிக்கைப் பிரிவு சுதந்திரமாக இருப்பது ஒரு முக்கியம் என  மத்திய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் நாகேந்திரநாத் சின்ஹா  தெரிவித்துள்ளார்.

தமிழகம் – மாநிலங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் விவரம்

  • தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம பஞ்சாயத்துக்களில் அதிகபட்சமாக ரூ .245 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக , 527 தணிக்கை அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. மீட்கப்பட்ட தொகை ரூ. 2.07 கோடியாக இருந்தது, முறைகேடான தொகையில் 0.85% மட்டுமே. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால், அவர்கள்மீது  ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.
  • ஆந்திராவில் 12,982 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன, மேலும் 31,795 சமூக தணிக்கைகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. மொத்தமாக முறைகேடான நிதி 239.31 கோடி ரூபாய்; மீட்பு ரூ 4.48 கோடி (1.88%). 14.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் 10,454 ஊழியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மொத்தம் 551 பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு 180 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடகா தனது 6,027 கிராம பஞ்சாயத்துக்களில் ரூ .173.6 கோடி முறைகேடு செய்துள்ளது; அதில், 1.48 கோடி (0.68 %) மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மொத்தம் 22, 948 தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இரண்டு ஊழியர்களின் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒருவர்மீது கூட எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை மற்றும் அதன் ஊழியர்கள் எவரையும் இடைநீக்கம் செய்யவில்லை.
  • பீகாரில், ரூ .12.34 கோடி முறைகேடு செய்யப்பட்டது; மீட்பு ரூபாய் 1,593 ஆக இருந்தது.
  • மேற்கு வங்கத்தில், 2.45 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது; ரூ .14,802 மீட்கப்பட்டது.
  • குஜராத்தில், ரூ .6,749 மட்டுமே முறைகேடாக பயன்படுத்தப்பட்டது, அதில் எதுவும் மீட்கப்படவில்லை.

கடந்த நான்கு வருடங்களில் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 38 வழக்குகளில், 14 வழக்குகள் ஜார்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவே அதிக வழக்கு பதிவு செய்த மாநிலமாக உள்ளது. மேலும், 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் 31 பேரின் சேவைகள் நிறுத்தப்பட்டன. எனினும், முறைகேடான ரூ .51.29 கோடியில் ரூ .1.39 கோடி (2.72%) மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியூ ஆகியவை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை.

இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏழைகளுக்கான தொடங்கப்பட்ட இந்த திட்டத்தல் இவ்வளவு பெரிய நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே பிஎம் கிஷான் திட்டத்திலும் கோடி கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது வெளியான நிலையில், தற்போது 100 நாள் வேலை திட்டத்திலும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஊழல்களில் மாநிலஅரசுகளுக்கும் பங்கு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த தவறியது, மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாக தோல்வியை மீண்டும் பிரதிபலித்துள்ளது.

தணிக்கை அறிக்கையில் முரண்பாடு?

100நாள் வேலைதிட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 2017.20ம் ஆண்டு வரை ஏற்கனவே ரூ.4200 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக 2020ம் ஆண்டு வெளியான ஆர்டிஐ தகவலில் தெரிய வந்தது.  சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3 ஆண்டுகளில் கிராமப் புற வேலைத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து ரூ. 4,200 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்திருந்தது, சேலம்அருகே உள்ள இராசிபுரத்தைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர்  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்று தெரிவித்திருந்திருந்தார்.

காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் வளர்ப்பில் 10 மரங்களை நட்டு விட்டு 1,000 மரங்கள் நட்டதாகவும், அதே மரங்கள் வறட்சியாலும் கால்நடைகளாலும் அழிந்து விட்டதாகவும், சிறிய பண்ணைக் குட்டையைக் கட்டி விட்டு பெரிய குட்டைக் கட்டியதாக மோசடி செய்தல், ஏரி, குளம், குட்டை, ஓடை ஆகியவற்றைத் தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி கரையைப் பலப்படுத்தியதாகவும் என இவ்வாறான தவறான கணக்கு காட்டியிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், தற்போது வெளியாகி உள்ள தணிக்கை அறிக்கையில் நாடு முழுவதுமே ரூ .935 கோடி நிதி முறைகேடு நடைபெற்று உள்ளதாவும், தமிழ்நாட்டில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி மட்டுமே நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் (2017 முதல் 2020 வரை) ரூ.4200 கோடி அளவுக்கு நிதிமுறைகேடு நடைபெற்றுள்ளதாக  ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கடந்த 4 ஆண்டுகளில் (2017 முதல் 2021 வரை)  ரூ.245 கோடி மட்டுமே நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தணிக்கை தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளது முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.