சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால்,  பேருந்து பயணத்தக்கு ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் எடுத்தவர்களின் நிலை கேள்விக்குறியானது. இதையடுத்து, அவர்களின் பஸ்பாசுக்கான  கால அவகாசம் ஜூலை 26 வரை நீட்டிப்பு செய்து மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு மாதம் முழுவதும பயணம் செய்பவர்களுக்கு  தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகை பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பாஸ் பெற்றவர்கள், மாநகர பேருந்துகள் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இதுபோன்ற மாதாந்திர பாஸ் பெற்று பலர் பயணித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஏராளமானோர் ரூ.1000 பஸ் பாஸ் எடுத்திருந்த நிலையில், திடீரென   கொரோனா பரவல் காரணமாக பொது பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால்,  பஸ் பாஸ் எடுத்தவர்கள்,  தங்களது பணம் போச்சே என்று வருந்தினர்.  தற்போது, சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டதால், ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது  ரூ.1000க்கான பஸ் பாஸ் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 26ஆம் தேதி வரை ஆயிரம் ரூபாய் பஸ்களை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.