பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கொரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பென் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது. அந்நிறுவனத்திடமிருந்து ஒவ்வொரு மொழி உரிமையையும் தனித்தனியாகக் கைப்பற்ற, கடும் போட்டி நிலவியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியின் டிஜிட்டல் உரிமைகளை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தி மொழியின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. ஆங்கிலம், கொரியன், ஸ்பானீஷ், டர்க்கீஷ், போர்ச்சுகீஷ் ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

தொலைக்காட்சி உரிமைகளில் இந்தி உரிமையை ஜீ சினிமாவும், தெலுங்கு, தமிழ், கன்னட உரிமையை ஸ்டார் குரூப் நிறுவனமும், மலையாள உரிமையை ஏசியா நெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியாவில் தயாரான சினிமாக்களில் எந்தவொரு படமும் இந்த அளவு விலைக்கு விற்பனையானதில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.