நாடு முழுதும் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோப் கார் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.*

இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென்காசி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளது.

இதற்காக, சேலம் அருகே திருச்செங்கோடு, ஏற்காடு மற்றும் கொல்லி மலை ஆகிய பகுதிகள் தவிர சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகருக்கும், பழனி முதல் கொடைக்கானல் வரையும், ஊட்டி முதல் பைக்காரா, குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன், திருச்சி மலைக்கோட்டை, குற்றாலம், கொடைக்கானல் ஸ்டார் ஏரி, திருமலை கோவில், சதுரகிரி, பர்வதமலை, அகத்தியர் அருவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருத்தணி உள்ளிட்ட 22 இடங்களில் ரோப் கார் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ரோப் கார் சேவை சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் இரண்டு மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.