மும்பை: மகாராஷ்டிராவில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

டோரன்மால் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கட்கி காட் மலைப்பாதையில் இந்த வாகனம் கவிழ்ந்துள்ளது. விபத்தில், உயிரிழந்தவர்கள் நந்தூர்பாரில் உள்ள ஜாபி பாலாய் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆவர்.

அன்றாட பணிகளுக்காக டோரன்மலுக்கு வாகனத்தில் சென்ற போது, வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், 150 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நந்தூர்பார் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட் கூறியதாவது: முதல்கட்டமாக 5 பேர் இறந்துள்ளனர், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.