டில்லி

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்பட சுமார் 150 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் அந்த கடிதத்தில், ”மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் கொலைகள், வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை.

நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின்னர் நிகழ்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பெண்கள் உள்படப் பலர் கொல்லப்பட்டுள்ளனர்  தவிர. 4,000 முதல் 5,000 பேர் வரை அசாம், ஜார்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பண்பாட்டின் மீது நடத்தப்படும் பலமான தாக்குதலாகும்.  இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட வேண்டும்” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

தவிர மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாகச் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நாடு முழுவதிலும் இருந்து 2,093 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.