பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன

நேற்று கர்நாடக சட்டசபையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்,  கர்நாடக சிகரெட்-புகையிலை பொருட்கள் தடை சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்

அமைச்சர் தினேஷ் குண்டுராவ்,

”தற்போது கர்நாடகத்தில் சிகரெட் வாங்க வயது வரம்பு 18 ஆக உள்ளது. நாங்கள் இந்த வயது வரம்பை 21 வயதாக நிர்ணயிக்கிறோம். எனவே கர்நாடகத்தில் உள்ள கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் விற்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் பள்ளி-கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இதை மீறினால் ரூ.100 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சிகரெட் விற்பனை செய்பவர்கள் பிற பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அதிகமாக அபராதம் விதித்தால் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் அபராதத்தை குறைவாக நிர்ணயித்துள்ளோம். 

 மேலும் ‘ஹுக்கா’ விடுதிகளுக்குத் தடை விதித்துள்ளோம். இதைப் பணக்காரர்கள் நடத்துகிறார்கள். அதனால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கிறோம். இதைத் தவிர 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.”

என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.