சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான  துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார்.

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை கடந்த 06.03.2025 உறுதி செய்தன நிலையில்,  பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டு, அதுகுறித்து தலைமை கழகத்திற்கு தெரிவிக்க  அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக  தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.