மதுரை:
திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அறிவிக்கப்பட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான போஸ்டர்களில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டு, ஏ.ஜெயரஞ்சன் பெயர் சிறப்பு பேச்சாளராக இடம்பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து அமைச்சர் பிடிஆர் பேசியதாக சொல்லப்பட்ட ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், அது தன்னுடைய ஆடியோ இல்லையென பிடிஆர் விளக்கமளித்திருந்தார். ஆனாலும் தற்போது அவரின் பெயர் சிறப்பு பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.