திருச்சி: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருச்ச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமி, பீமா கொரோகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டுபல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம் என்று கூறி, மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திருச்சி பேருந்து நிலையம் எதிரே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மேலும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்டச் செயலாளர் ராஜா, ”பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமியைப் பிணையில் வெளியே வர முடியாத பிரிவில் மத்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஐ.நா. சபை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வலியுறுத்தியும் ஸ்டேன் சுவாமியை வெளியே விடவில்லை. இதுபோன்ற செயல்பாடுகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.

டெல்லியில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மீதும், மும்பையில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும், சிறுபான்மை இயக்கத்தினர் மீதும் பதிவு செய்துள்ள உபா சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.