டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக,  அமர்நாத் குகைக்கோயில் புனித யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மாநில அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கும்பமேளாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அமர்நாத் குகைக்கோவில் புனித யாத்திரை தொடங்கும் காலமாக உள்ள நிலையில் அமர்நாத் கோவில் செல்வதற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.