திருச்செந்தூர்:

தென் மாநிலங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியிலும்,  மாநிலத்திலும்  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்  நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி முதல்வர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவித்தவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துள்ளனர் என்றார்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தவர், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மோடி அரசு  தென்மாநிலங்களின் உரிமைகளை பறித்து, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த தாகவும் தெரிவித்தார்.

தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு முதல்வர்  நாராயணசாமி கூறினார்.