சென்னை: போக்குவரத்துத்துறையில் ஆட்சேர்ப்பு முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர்,  வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும், பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

இதற்கிடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி,  மோசடி மூலமாக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக  அமலாக்கத்துறையினர் அவர் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஏப்ரல் மாதம்  செந்தில் பாலாஜிக்க சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. எஃப்ஐஆர் பதிவுகளில் அவர் பெயர் முதலில் இடம் பெற வில்லை. இருப்பினும் அப்போதே சம்மன் வரத் தொடங்கின. துணை குற்றப்பத்திரிகையில் தான் மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர், உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த விசாரணைக்கு இடைகாலத் தடை விதிக்கப்பட்டது. சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக உறுதியான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தது. மேலும் அந்த பிரிவின் கீழ் சம்மன் அனுப்ப முடியாது எனக் கூறியது.

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், அமைச்சர் செந்தில்பாலாஜி கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.