சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997-ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 -இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,-இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.