பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?

நமது இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

 பூஜைகளின் போது கற்பூரத்தை ஏன் ஏற்றுகிறோம். கற்பூரமாவது எரிக்கப்படும் போது அது ஒளியாகி காற்றில் கரைந்துவிடுகிறது.

 அதன் மிச்சம் என்பதே இருக்காது. அது போல நாமும் நம்முடைய இப்பிறவியின் மிச்ச சொச்சம் இல்லாமல், இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவநிலையை அடைய வேண்டும்.

ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, பரபிரம்மத்துடன் ஜீவன் கரைந்து இரண்டற கலக்கவேண்டும் என்ற உண்மையை உணரவே, கற்பூர ஒளியைக் கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும்.

 இதனால் நாம் நம்முடைய அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை அடையலாம்.

கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு.

கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் என்னும் முறையில் எரிகிறது.

அதாவது அந்தப் பொருளைச் சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும்.

இதே போலக் கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.

கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது.

 அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது.

கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.