நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்…

வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற இந்து கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகக் கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்குச் செல்வதற்குப் பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர்.
கோவில்களுக்குச் செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது, இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும்.
இந்த ஐம்புலன்கள் கோவிலுக்குள் உள்ள எண்ணிலடங்கா செயல்கள் மூலம் தூண்டப்படலாம். அதனால் இந்து சமயத் திருநூல்களின் படி, கோவில்களுக்குச் செல்வதற்குப் பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
கோவிலின் கட்டமைப்பு மற்றும் இருப்பிடத்திற்குப் பின்னணியில் உள்ள காரணம், எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் (Positive Energy) திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்குக் காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயுமிடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.
மூர்த்திகளின் திருவுருவச் சிலை :-
கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்ப கிரகத்தில் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படுவார்கள். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஸ்வாமியை பிரதிஷ்டை செய்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.
கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக காலணிகளைக் கழற்றி வைப்பதற்குப் பின்னணியில் உள்ள காரணம் :-
கோவில்களுக்குச் செல்வதற்குப் பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைப் பார்க்கையில், கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக காலணிகளைக் கழற்றி வைக்க வேண்டிய விஷயத்தைப் பற்றியும் பார்த்தாக வேண்டும்.
ஏற்கனவே கூறியதைப் போல், தூய்மையான மின்சார மற்றும் காந்த அலைகளைக் கொண்ட நேர்மறையான ஆற்றல் திறன் கொண்ட இடத்தில் தான் கோவில்கள் கட்டப்படும். பழங்காலத்தில், நேர்மறை ஆற்றல்களின் சிறந்த கடத்தியாக இருக்கும் விதத்திலான தொழில்நுட்பத்தில் கோவில்களின் தரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் திறன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் வழியாக அவர்களுக்குள் ஊடுருவும். அதனால் தான் கோவிலுக்குள் வெறும் காலுடன் செல்லச் சொல்கிறார்கள்.
கோவில் மணியை அடிப்பதற்கான காரணம் :-
கோவிலுக்குள் நுழையும் போதெல்லாம், மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கோவில் மணியை அடிக்க சொல்வார்கள். இந்த மணி எழுப்பும் ஒலி உங்கள் கேட்கும் திறனை முனைப்பாக்கும். கோவில் மணியை அடிக்கும் போது, அது கூர்மையான ஒலியை எழுப்பும். அது ஏழு வினாடிகளுக்கு எதிரொலிக்கும். உங்கள் உடலில் உள்ள ஏழு ஹீலிங் மையங்களை முனைப்பாக்க இந்த 7 வினாடி காலம் போதுமானது.
ஸ்வாமிக்குக் கற்பூரம் காட்டுவதற்கான காரணம் :-
கோவில்களுக்குச் செல்வதற்குப் பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைப் பார்க்கும் போது, கடவுள் திருவுருவத்திற்கு முன் கற்பூரம் ஏற்றும் முறையைப் பற்றித் தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இருட்டான கோவிலுக்குள் ஸ்வாமிக்கு முன்பு கற்பூரம் ஏற்றுவதனால், உங்களது பார்வை உணர்வு முனைப்பாகும். மேலும் அதுவே அதற்கான காரணமாகும்.
தீபாராதனை தட்டில் உங்கள் கைகளை ஒத்தி எடுப்பது எதற்காக? : தீபாராதனை காட்டும் போது, கற்பூரம் ஏற்றப்பட்டுள்ள தட்டில், கைகளால் ஒத்தி எடுப்போம். பின், கைகளால் கண்களை ஒத்திக் கொள்வோம். இதனால் வெதுவெதுப்பான உங்கள் கைகள் கண்களின் பார்க்கும் உணர்வை முனைப்பாக்கும்.
கடவுள்களை மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம் :-
பூக்கள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்கக் கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்குப் படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தைக் கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்ப்பணிக்க முடியும். உதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவை. பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாகச் சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.
தீர்த்தம் குடிப்பதற்குப் பின்னணியில் உள்ள காரணம் :-
கடவுளுக்குப் பூஜைகள் செய்து முடித்த பிறகு, பக்தர்களுக்கு நீர் வடிவிலான தீர்த்தம் பிரசாதமாக அளிக்கப்படும். நெய், பால் மற்றும் தயிரைக் கொண்டு இது செய்யப்படும். தீர்த்தத்தைச் செப்பு அல்லது வெள்ளி பாத்திரத்தில் தான் பொதுவாக வைத்திருப்பார்கள். நம் உடலில் உள்ள 3 வகையான தோஷங்களைச் சமநிலையுடன் வைத்துக் கொள்ளவே தீர்த்தத்தைச் செப்பு பாத்திரத்தில் வைக்கிறார்கள். இது உங்கள் சுவை உணர்வை முனைப்பாக்கும்.
மூலஸ்தானத்தைச் சுற்றி வருவதற்கான காரணம் :-
பிரார்த்தனை முடிந்த பிறகு, மூலஸ்தானத்தைச் சுற்றி 9 முறை கடிகார திசையில் சுற்றி வர வேண்டும். இப்படிச் சுற்றி வருவதால், உங்கள் உடல் கோவிலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நேர்மறையான ஆற்றல் திறன்களையும் உறிஞ்சிவிடும். இதனால் உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்.