லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பனிப்பாறை வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு உதவிட தயார் என்று அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது. பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கவும், தேவைப்பட்டால் உதவியை வழங்கவும் தயாராக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.