மும்பை
சச்சின் ஒரு ஆலோசகராக இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கமிட்டியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வருடத்துக்கு ரூ.7.5 கோடி ஊதியம் அளிக்க கமிட்டி ஒத்துக் கொண்டுள்ளது. முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை விட இது ரூ.1.25 கோடி அதிகம் ஆகும். ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருப்பதால் அவரால் வர்ணனையாளராக பணி புரிய இயலாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஊதியம் அளிக்க ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது
அது தவிர அவர் தனக்கு உதவியாளர்களாக பரத் அருண், மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோரை நியமிக்க சொன்னதையும் கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. அருணுக்கு ரூ.2 கோடியும், பங்கருக்கு ரூ.2.2 கோடியும் வருட ஊதியம் அளிக்க கமிட்டி ஒத்துக் கொண்டது. சச்சின் டெண்டுல்கரையும் ஒரு கன்சல்டண்ட் ஆக நியமிக்கவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கர், கங்குலி மற்றும் லட்சுமண் ஆகியோர் ஜகீர்கானையும் ராகுல் டிராவிடையும் கன்சல்டண்டுகள் ஆக சிபாரிசு செய்திருந்தனர். அது குறித்து ரவி சாஸ்திரியிடம் கேட்ட போது, ”அவர்கள் நேரம் ஒதுக்குவதைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். நான் இருவரிடமும் ஏற்கனவே இது பற்றி பேசி இருக்கிறேன். இருவரும் அற்புதமான கிரிக்கட் வீரர்கள். சச்சின் டெண்டுல்கரும் ஆலோசகராக வேண்டும் என்பதே என் விருப்பம் அவர்கள்தான் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விவாதிக்க வேண்டும். ” எனக் கூறினார்.
அவர் குறிப்பிட்ட அந்த சம்பந்தப்பட்டவர்கள் வேறு யாருமில்லை. இந்திய கிரிக்கெட் கமிட்டிதான். கமிட்டி திராவிட் மற்றும் ஜாகிர் போடும் கண்டிஷன்களை ஆராய்ந்து வருகிறது. ஜாகிர் தற்போது ஐ பி எல் பந்தயங்களில் விளையாடுவதால் தன்னால் வருடத்துக்கு 25 நாட்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியுள்ளார். திராவிட் சீரியஸ்க்கு முன்பான பயிற்சிகளிலும், நெட் பிராக்டிஸ்களில் மட்டுமே பணி புரிய முடியும் என்றும், தன்னால் வெளிநாடுகளில் மேட்ச் நடக்கும் நேரத்தில் உடனிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சச்சினிடம் இது பற்றி பேசவே இல்லை என தெரிய வருகிறது.
கமிட்டி இவர்களைப் பற்றி முடிவெடுக்காமல் தாமதம் செய்வது குறித்து செயலாளர் அமிதாப் சவுத்ரியிடம் கேட்டபோது, “இதில் எந்த வித குழுப்பமும் இல்லை. தலைமைப் பயிற்சியாளரை நியமித்த போதே, அவர் உதவியாளர்கள் யார் என்பது அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்லி விட்டோம். அவர் விருப்பப்படி உதவியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். ராகுல் மற்றும் ஜகீர்கான் உதவியாளர்கள் அல்ல, ஆலோசகர்கள்” என தெரிவித்தார்.