வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதாகோபாலன்

 

மேஷம் 

அதிருஷ்ட வீடு என்றும் செளபாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்பதாம் வீட்டை பொன்னன் என்று அழைக்கப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த குரு பகவான் பார்க்கிறார். எனவே திடீர்ப் பண வரவும் லாபமும் நன்மையும் ஏற்படும். தேர்வுக்குப் படிக்கறவங்கள் ஒரு பத்து பர்சன்ட் முயற்சியை அதிகமாய்த் தாளிக்கணும்மா. அப்போதுதான் ருசியான ரிசல்ட் வரும். கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும். காதல் துவங்க வாய்ப்புண்டு. திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். நிலம் வீடு வாங்கத் திட்டமிடுங்க. நல்லபடியா முடியும். நண்பர்களும் வங்கி லோனும் மனசுக்கு மகிழ்ச்சி தரும்.

பிள்ளையாரை பின்பற்றி வணங்குங்க

ரிஷபம்

ஆறில் குரு பகவான் அதிசாரமாக நகர்வதால் நண்பர்களால் நன்மை ஏற்படும்.. புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தையின் புத்திசாலித்தத்தால் நன்மை விளையும்.  திடீர் அதிருஷ்டம் ஏற்படும்.சின்னதாய் ஜுரம் வந்தா பெரிசா கவலை வேணாம். ஜுஜூபி. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார் ஐடியா கொடுத்தாலும் தூக்கி சிக்ஸர் அடிச்சுடுங்க. மனசில் மார்கழி! குழந்தைகள் மனதைக் குளிர்விப்பாங்க. நீண்ட பயணம் ஒன்று உண்டும்மா.. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். செலவுதான் அதிகம் – என்கிறீர்களா! ஸோ வாட்! ஹாப்பீ செலவுதானேம்மா. சாப்பாட்டு விஷயத்தில் கவனமோ கவனம் தேவை.

ஆஞ்நேயரை வணங்கினால் அருள் தருவார்.

மிதுனம்

ஒன்பதில் கேது இருப்பதாலும் அந்த வீட்டை ராகு பார்ப்பதாலும் தந்தைக்கு வெளிநாட்டு யோகம் உண்டு. அதிருஷ்டத்தை மட்டுமே நம்பாமல் உழைப்பை  நம்ப வேண்டிய தருணம் இது.கல்யாண முயற்சிகள் டாப் கியரில் போகலைன்னு டென்ஷனாகாதீங்க. எந்த கியரில் போனாலும், நடக்க வேண்டிய சமயத்தில் நடக்கும். டோண்ட் வொர்ரி.. அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பாங்க மேம். சும்மாவா! கொஞ்ச நஞ்சமாகவா உழைச்சீங்க! கோயில்களுக்குப்போங்க. கைவராதுதான். எனினும் போங்க. புது வேலை தேடணுமா! கம் ஆன்! ஸ்டார்ட். உடனே முயற்சி துவங்குங்கம்மா

நாகத்தை வணங்குங்க நரகத்தைக் கடக்கலாம்

கடகம்

எட்டாம் வீட்டில் கேது இருப்பதால் ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கமும் வேண்டாம். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில் சாமர்த்தியம்  அதிகரிக்கும். குடும்பத்தில் யாராவது வெளிநாட்டில் வேலை கிடைத்தோ அல்லது படிப்பதற்காகவோ செல்ல நேரிடும். குரு நாலில் இருப்பதால் மாணவர்களுக்கு வெற்றி.ஆறாம் வீட்டில் சனி இருப்பதால் நண்பர்கள் அல்லாதவர்களை நண்பர்கள் என்று நம்பிவிட வேண்டாம். தற்போதைக்கு நாலில் குரு இருப்பதால் தாயாருக்கு நன்மை ஏற்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். வாகனம் வாங்குவீர்கள். அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும். மம்மிக்கு எல்லாமே சற்று தாமதமா நடக்கலாம். லேட்டா வந்தாலும்….னு ஒரு வசனம் இருக்கே,, ஆங்.. அதேதான். சின்னச் சின்னதாய் எறும்புக்கடி மாதிரி ஆரோக்யம் கடிக்கும். கண்டுக்காதீங்க. அது பாட்டுக்கு அதுன்னு எடுத்து பின் சீட்ல போட்டுவிட்டு அலட்சியமா முன் நோக்கி ஓட்டுங்க…

மால் மருகனை – முருகனை – மனதார வணங்குங்க

சிம்மம்

ஆறாம் வீட்டில் புதனும் சூரியனும் இருப்பதால் எதிர்பாலினத்தைச் சேர்ந்த  சிநேகிதர்கள்/ சிநேகிதிகள் நன்மையளிப்பார்கள். குரு மூன்றில் இருப்பதால் நண்பர்களால் உதவ  முடியாத நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையும் தைரியமும் சந்திரனால் கிடைக்கும்.சிஸ்டர்ஸ் மற்றும் சகோதரர்கள் அனுசரணையா இருப்பாங்க. கட்லெட் சமூசாவுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து மம்மி அல்லது மனைவி கையால் சாப்பிடுங்க. ஆரோக்யம் பிழைக்கும். விருது பரிசெல்லாம் உங்களுக்கு ஜுஜூபி. பரம்பரை வீடு நகை எல்லாம் தேடி வரும்.. அட… குழந்தைங்கன்னு இருந்தால் கோபம்னு இருக்கத்தான் செய்யும். சரிக்கு சமமாய் நின்று மல்லுக்கட்டாதீங்கம்மா. உங்க வயசென்ன அவங்க வயசென்ன!

குருவாயூரப்பனைப் பார்த்துக் குவியட்டும் கரம்

கன்னி

ஐந்தில் புதன் என்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அவர்களுக்கு நன்மையும் பாராட்டும் கிடைக்கும். இத்தனை காலம் கல்வியில்  நாட்டமின்றி இருந்த குழந்தைகள் திடீரென்று ஆர்வம் வரப்பெற்று நல்ல முறையில் படித்து உயர்ந்து உங்களுக்கு நிம்மதி அளிப்பார்கள். பத்தாம் வீட்டிற்குத் தற்போது குரு பார்வை கிடைத்திருப்பதால் உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். ஆமா…வியப்பு மேலிடக் கேட்கறேன்…அதெப்பிடிம்மா கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! கிரேட்.. விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். இரண்டில் குரு இருப்பதால்  குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு.

மகாலட்சுமியை மனதாரத் துதிக்கணும்

துலாம்

ஐந்தாம் வீட்டில் கேது இருப்பதால் குழந்தைகள் பற்றிய சிறு  டென்ஷன்கள் ஏற்பட்டாலும் அவை தாற்காலிகமானவைதான்.  ஏனெனில் விரைவில் குரு பார்வை கிடைக்கவிருக்கிறது. ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் கணவருக்கு/ மனைவிக்கு நன்மை உண்டு.  நாலில் புதன் இருப்பதால் கல்வியில் மிகவும் சிறந்த விளங்க உதவுவார்.எழுமின். விழிமின். சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும். நிலம் வீடுன்னு வாங்குவீங்க. எதையும் பல முறை யோசிச்சு செய்யுங்க. வர வேண்டிய தொகைகள் அப்படி இப்படி ஆட்டம் காட்டும். பிறகு கிடைக்கும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் சேரும். வெளிநாட்டுப் பயணம் கொஞ்சம் தட்டிப் போயிக்கிட்டிருந்தது. இனி நிச்சயமாயிடும்.

அனுமனை அனுதினமும் துதியுங்கள்.   

விருச்சிகம்

நாலாம் வீட்டில் கேது. படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்கள். பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகத்தை வாங்கித்தர வாய்ப்புள்ளது! பத்தாம் வீட்டில் அமரந்திருக்கும் ராகுவும் அந்த வீட்டைப் பார்க்கும் கேதுவும் வெளிநாட்டு உத்யோகத்தில் உங்களை உட்கார வைப்பார்கள். அல்லது உள்ளூரில்  உள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.ஒன்பதாம் வீட்டை சூரியன் பகவான் பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடி ஓடி வரும்.ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் திடீர்ப் புகழ் அடைவார்கள். முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது… அதற்காக ஒரேயடியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க வேண்டாம். கையெழுத்துப் போடுவதற்கு முன் பேனாவை சரிபார்ப்பதைவிட உங்க தீர்மானத்தை சரிபாருங்க. ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். பயணத்துக்கு ரெடியாம்மா? இல்லாட்டியும் யார் விட்டாங்க!

சிவனை சிறுபோதும் மறக்காதீங்க. 

தனுசு

ஏழரைச் சனி இருப்பதால் முன்னேற்றமும் சற்று நிதானமாகவே இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பதினோராம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும். நாலில் சுக்கிரன் அழகிய வீடுவாங்க வைப்பார். அல்லது உங்கள் தாயார் வீடு வாங்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் கலை சம்பந்தமான புதிய வகுப்புகளில் சேர வாய்ப்புள்ளது. புது வாகனங்கள் அமையும். அவை காண்போரைக் கவரும் அழகிய வாகனமாக இருக்கும்.உத்யோகத்தில் பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. இயந்திரங்களை இயக்கும் போது மனசை உலாப்போக விடாதீங்க. திடீர்னு முகவரி மாறலாம். வீடாகவும் இருக்கலாம், ஆபீசாகவும் இருக்கலாம். எதுவும் நன்மைக்குத்தான்.

நாராயணனை நாளும் சேவியுங்க 

சந்திராஷ்டமம் : 09.02.2017 முதல் 11.02.2017 வரை

மகரம்

எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் உடல் நிலையை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு வாக்குப் பலிதம் அதிகமாகும். இரண்டாம் வீட்டுக்கு சனி பகவானின் பார்வை கிடைத்திருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக்  கண்டு பயம் எதுவும் வேண்டாம். கல்லூரியில்/ பள்ளியில் படிக்கறீங்களா? ஐ மீன்… மாணவி? மம்மியை டீ போட்டுக் கொடுக்கச் சொல்லி கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாகப் படியுங்க. பலன் மிக அதிகம் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. உங்க கணவருக்கு எதிர்பாராத தொகை ஒன்று கிடைக்கும்.

தூக்கத்தில் கூட துர்க்கையை மறக்காதீங்க

சந்திராஷ்டமம் : 11.02.2017 முதல் 13.02.2017 வரை

கும்பம்

ஒன்பதாம் வீட்டில்  குரு இருப்பதால் அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும். இதே காரணத்தினால் தந்தைக்கு அனைத்து வகை நன்மைகளும் கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.அலுவலக /சொந்த விஷயமாகவும் வெளியூர் வெளிநாடு என்று போக வாய்ப்பு உள்ளது. இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கவர்ச்சிகரமாகப் பேசி நன்மை அடைவீர்கள்.இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் திடீர் சுப நிகழ்வுகள் நிகழும். சனி பார்வை ராசிக்கு இருப்பதால் எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும்  குரு பார்ப்பதால் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் ஹாப்பீ செய்திகள்ளாம் உண்டு… உங்களுடைய நியாயத்தை மற்றவர்கள் புரிஞ்சுக்கலைன்னு புலம்பறீங்களே…புரிய வெச்சீங்களா? இல்லாக்காட்டி அவங்களோட நியாயத்தையாவது நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? அட அட்லீஸ்ட் அதுக்கு டிரை பண்ணினீங்களா? டாடிக்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க. பன்னிரண்டாம் வீட்டில் புதன் இருப்பதால் படிப்புக்காகவும், சுக்கிரன் இருப்பதால் ஆடை அணிமணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள்.

ஆதித்தனை அணுவளவும் மறக்க வேணாம்

சந்திராஷ்டமம் 13.02.2017 முதல் 15.02.2017 வரை

மீனம்

நாலாம் வீட்டை குரு பகவான் பார்க்கிறார். நான்காம் வீடு குறிப்பது தாயார் ! கல்வி! வாகனம்!! தாய் உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்குவார். தங்க நகை  கூடப் பரிசளிக்கலாம்! கல்வியில் அசத்துவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். அல்லது தற்போதுள்ள வாகனத்துக்குப் புதுப் பொலிவு கிடைக்கும். ராசியின்மீது செவ்வாய் அமர்ந்திருக்கிறார். இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்க வேண்டாம். அநாவசிய கோபம்  ஏற்படாமலும் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து சத்தம்  போடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்கம்மா. கனவுகளெல்லாம் நினைவாகும் என்ற வாக்கியத்தை சினிமாவிலும் சீரியலிலும்தானே கேட்ருக்கீங்க, இப்ப அனுபவத்தில் பாருங்க. அலுவலகம் பற்றி மனதில் அலையடித்துக் கொண்டிருந்த டென்ஷன்கள் டாட்டா பை பை சொல்லிட்டுக் கிளம்பிடும்.

விநாயகரை வினாடியும் மறக்காதீங்க

சந்திராஷ்டமம் 15.02.2017 முதல் 18.02.2017 வரை