பாரபங்கி:

தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி., மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளை சிலர் பலாத்காரம் செய்து மிரட்டி வருவதாக, அந்த பெண்ணின் தந்தை கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம், உ.பி. காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து பாரபங்கி பகுதியை சேர்ந்த திவ்யா பாண்டே மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அடுத்த சில மாதங்களில் சில அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்து ஆபாச படங்களை பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரின் விசாரணையால் தான், விரக்தியடைந்துள்ளதாக கடந்த ஜனவரி 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில், குற்றவாளிகள் மீது போட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்

. மேலும், “குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிகார பலம் மிக்க அவர்கள், வழக்கை வாபஸ் வாங்குமாறு எங்களை மிரட்டுகின்றனர். எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை” என்று அந்தப் பெண் உருக்கமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தை ரத்தத்தால் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல உ.பி. முதல்வர் யோகிக்கும் இந்த பெண், கடிதம் எழுதியுள்ளார்.