ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் விடுவிக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கடற்படையினரால், தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணமாக, கடல் எல்லையை கூறி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 29மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.   தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக செயல்பட்டு தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் விடுவிக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே  இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் அனாமத்தமாக நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.