சென்னை:
10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

பாமகவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்தே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ராமதாசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது 10.5% உள் ஒதுக்கீடு குறித்து ராமதாஸை விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியவர் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என். ராமமூர்த்தி. பல ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திற்காகத் தன்னலம் பார்க்காமல் உழைத்தவர் ராமமூர்த்தி.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 15% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் சி.என். ராமமூர்த்தி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை அறிவுறுத்தியது. ஆனால், எடப்பாடியும் ராமதாசும் தேர்தலுக்காகப் பொய் ஒப்பந்தம் போட்டு அதை 10.5 சதவீதமாகக் குறைத்துவிட்டார்கள்.

மேலும், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வன்னியச் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் வன்னியர் சமுதாய மக்களுக்காகத் தாம் மட்டுமே குரல் கொடுப்பது போன்ற மாய பிம்பத்தைக் கட்டமைக்க ராமதாஸ் முயல்கிறார். தமிழக அரசுக் கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.