அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் சிலை திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர்.

அதேவேளையில் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவுக்காக நேற்று அயோத்தியில் குவிந்த பக்தர்கள் அனைவரும் இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ராமர் கோயில் காலை 7 மணி முதல் 11:30 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்காக திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரவு 7 மணிக்கு நடைபெறும் தீப ஆராதனையில் கலந்து கொள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் முன்னதாக அனுமதி பெற வேண்டும் என்றும் மாலை 6:30 மணிக்கு நடைபெறும் ஷ்ரிங்கார ஆரத்திக்கு ஒருநாள் முன்னதாகவே பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.