டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொள்ளும்படி, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,  துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோவில் நிர்வாகம் சார்பில்  அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய மக்கள் உள்பட உலகில் உள்ள இந்து மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல  குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி இராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயற்குழு தலைவர் அலோக்குமார் உள்ளிட்டோர், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்-க்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு அயோத்தி இராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயற்குழு தலைவர் அலோக்குமார் ஆகியோர் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை நேரில் சந்தித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.