அனந்த நாக்

ஜம்மு காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல வீடுகள் தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடுகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியுடன் ‘செல்பி’ எடுத்து மத்திய அரசின் பிரத்தியேக இணையதளத்தில் பதிவேற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 400 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியுடன் மக்கள் பேரணி சென்றனர். காவல்துறை மற்றும் ராணுவம் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் மாணவர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைநகர் டில்லியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிள்களில் பேரணி சென்றனர். அப்போது அவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றனர். பேரணியைத் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜி கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல், மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி பிரகதி மைதானத்திலிருந்து தொடங்கி இந்தியா கேட் வட்டம் வழியாக மேஜர் தியான் சந்த் மைதானத்தில் முடிவடைந்தது.