டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட  மசோதாக்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆன்லைன் கேம் உள்பட சிலவற்றுக்க தமிழ்நாடு அரசு தடை விதித்து சட்டம் நிறைவேற்றி உள்ளது. அதே வேளையில், மத்தியஅரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி மசோதா நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாக்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே நிறைவேறியது.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடிபேசினார். அதைத்தொடர்ந்து, மத்தியஅரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இந்த கூட்டத்தொடரில், வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  மேலும், மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மசோதாவால், தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.