பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித்தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல  மற்றொரு மூத்த தலைவரான வீரப்ப மொய்லிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, சமீபத்தில், கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமார்,  தொடங்கிய, மேகதாது அணைக்கு தடை போடும்  போராட்டத்துக்கு தலைமைவகித்து தொடங்கி வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டதால், பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மாநில அரசு அச்சம் தெரிவித்தது.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே-விற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது  79 வயதாகும் கார்கே  ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட நிலையில், அவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்கே,  உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல மற்றொரு காங்கிரஸ் தலைவர்  வீரப்ப மொய்லிக்கு கோவிட் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இது குறித்து வீரப்ப மொய்லி ட்விட்டரில், “இன்று (அதாவது நேற்று ஜன.12) மாலை எனக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. எனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் தென்பட்டன. தற்போது நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை: தமிழ்நாட்டுக்கு எதிராக, கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை!