ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேவா  தலைவர் சுட்டுக கொல்லப்பட்டதை அடுத்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த சுக்தேவ் சிங் கொஹமெதி ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் ஆவார் . ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை இவர் தொடங்கினார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.

நேற்று ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று சுக்தேவ் சிங்கின் வீட்டிற்கு வந்த 3 பேர் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கித் தாக்குதலில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேர் தப்பியோடினர். ராஜஸ்தானில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுக்தேவ் சிங் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ராஜஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.