சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு 5வது மாதமாக சிறை விடுப்பு நீட்டித்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 கைதிகள் தண்டனை பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை மத்தியஅரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு  பரோல் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பரோலில் வெளியே உள்ளனர். இதற்கிடையில், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ரவிச்சந்திரனின் சிறை விடுப்பை ஐந்தாவது முறையாக நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  அவரது தாயார் ராஜேஸ்வரி உடல்நலம் பாதிப்பு காரணமாக, அவர்  உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில், மேலும்  30 நாட்கள் கூடுதலாக சிறை விடுப்பு கோரிய நிலையில், அவரது விடுப்பு 5வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரவிச்சந்திரன் அடுத்த மாதம் 16 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.