சென்னை: ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை,  நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநருடன் அரசியல் பேசினேன், ஆனால், அதுகுறித்து சொல்ல முடியாது என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, திமுக கூட்டணியைச் சேர்ந்த  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அதில், அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்திப்பது ஏற்புடையதே எனத் தெரிவித்துள்ள அவர், அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்aகான கட்சி அலுவலகம் அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலைப் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது எனக் கூறியுள்ளார்.