ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் காங்கிரசில் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்களால், கட்சிப் பொறுப்பு மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து, சச்சின் பைலட் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை பாஜகவுக்கு வருமான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவின் அழைப்பை நிராகரித்துள்ளார் சச்சின் பைலட்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட் உள்ளார். துணைமுதல்வராக இளந்தலைவர் சச்சின் பைலட் இருந்து வந்தார். இரு தலைவர்களுக்கும் இடையே தொடக்கம் முதலே பூசல் எழுந்து வந்த நிலையில், தற்போது, அதை முற்றி, சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், அங்கு ஆட்சி ஆட்டம் கண்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் சச்சின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளாதால், சச்சினை கட்சிப்பதவி மற்றும் துணைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது. மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம். இது வழக்கமான நடைமுறைதான்’ என்று சூசகமாக அழைப்பு விடுத்தார்.
ஆனால், பாஜகவின் அழைப்பை ஏற்க மாட்டேன் சச்சின் பைலட் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளவர்களின் மனதில் நஞ்சை கலக்கும் வகையில், நான் பாஜகவில் சேர இருப்பதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் எந்த சூழ்நிலையிலும் நான் பாஜகவில் சேர மாட்டேன் என்று கூறியுள்ளார்.