ஜெய்ப்பூர்: ராஜஸ்தான்  சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில்  உள்ள  199 தொகுதிகளிலும்  இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பார்மரில் உள்ள பேட்டு வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பிகானேர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் கிசாமிதேசரில் வாக்களிக்கும் முன், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்… ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது” என்று கூறினார். அதுபோல வாக்களித்த ராஜஸ்தான் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான மகேந்திரஜீத் மால்வியா கூறுகையில், “பாகிடோராவில் இது ஒருதலைப்பட்சமான தேர்தல். நான்காவது முறையாக போட்டியிடுகிறேன், இந்த முறை 4 அடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்….” என்றார்.

நாடு முழுவதும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வரும் 30ந்தேதி தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்எல்ஏவுமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததால், இந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலை 7மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு   மாலை 5 மணி வரை நடைபெறும்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும்  199 தொகுதிகளில் 1862 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில், , 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 105 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் இளம்வயது வாக்காளர்கள்   1,70,99,334  பேரும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 22,61,008 புதிய வாக்காளர்களும் அடங்குவர். இவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில்,   36,101 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், நகர்ப்புறங்களில் 10,501 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும், 65,277 வாக்குப்பதிவு அலகுகள், 62,372 கட்டுப்பாட்டு அலகுகள், இருப்புக்கள் உட்பட 67,580 விவிபிஏடி இயந்திரங்கள் வாக்குப்பதிவு பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 1,02,290 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தேர்தலில் இது கெலாட் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சண்டையா என்று கேட்டதற்கு, முதல்வர் அசோக் கெலாட், “ஒரு காலத்தில் ஒரு பிரதமர் ஒரு மாநிலத்தில் 2-3 கூட்டங்களை நடத்துவார், அந்த செய்தி கிராமங்களுக்கு சென்றது, ஆனால் இப்போது , பிரதமர் 30 கூட்டங்களை நடத்த வேண்டும்… ராஜஸ்தானில் அவர்களால் (பாஜகவால்) ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் அவர் தனது உரையின் போது என்னை தாக்கினார்.