டெல்லி: இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் பயணத்தின் போது, பயணிகள் தங்களின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய, பிளக் பாயிண்டுகளை வைத்துள்ளது. இனி, முன் எச்சரிக்கையாக, அந்த பிளக் பாயிண்டுகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மார்ச் 13ம் தேதி டேஹ்ராடூன் – சதாப்தி விரைவு ரயிலில், செல்போன் சார்ஜ் போடும் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டது. அதன் பின்னர் ராஞ்சி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையை  இந்திய ரயில்வே எடுத்துள்ளது.