டில்லி:

நாட்டில் உள்ள 600 ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு மேற்கொள்வதற்கான வடிவமைப்பு போட்டியை ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டு கழகமும் (ஐஆர்எஸ்டிசி) ஸ்ரீஜன் என்ற நிறுவனமும இணைந்து ரெயில் நிலைய மறுசீரமைப்பை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ரெயில்நிலைய வடிவமைப்பு போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்று ஐஆர்எஸ்டிசி சிஇஓ சஞ்சீவ்குமார் லோகியா தெரிவித்துள்ளார். மார்ச் 26ம் அன்று இந்த வடிவமைப்புகள் வந்து சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக இத்தகைய போட்டி அறிவிப்பை ரெயில்வே வெளியிட்டுள்ளது. குறைந்த செலவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

பரிசீலனை முடிவில் தேர்வு செய்யப்படும் நபர்கள் ஐஆர்எஸ்டிசி.யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.ஏற்கனவே ரெயில் நிலைய வடிவமைப்பு முகமைகள் சில வடிவமைப்பு மாதிரிகளை ஐஆர்எஸ்டிசி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.