ஜல்னா, மகாராஷ்டிரா

ரயில்வே துறைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூ.36000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் கூறி உள்ளார்.

நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜல்னாவில் பாலம் ஒன்றில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ் சாகிப் தான்வே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.   அவர் அந்நிகழ்வில் உரையாற்றி உள்ளார்.

அமைச்சர் ராவ்  சாகிப் தான்வே தனது உரையில், “எப்போதுமே பயணிகள் ரயில் இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இதைச் சமாளிக்க டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதால் நாங்கள் அதைச் செய்யமுடி யாது. இதனால் கடும் இழப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.  ஆனால் சரக்கு ரயில்கள் நல்ல வருமானம் தருகின்றன. இந்த ரயில்கள் கொரோனா பெருந் தொற்று காலத்தில் சரக்கு போக்குவரத்திலும், மக்களுக்கு நிவாரண பொருட்களைக் கொண்டு போய் சேர்ப்பதிலும், முக்கிய பங்காற்றின.

விரைவில் மும்பை-நாக்பூர் விரைவு தடத்தில், புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் மக்களுக்குத் தேவையானது ஆகும். தற்போது ரயில்வே துறை, அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு வழித்தட திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இத்திட்டம் நவி மும்பையை டெல்லியுடன் இணைக்கும்”எனத் தெரிவித்துள்ளார்.