டில்லி:

ரெயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை கால பயணப் படி (எல்டிசி) அளிக்க கடந்த 27ம் தேதி மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரெயில்வே ஊழிர்கள் ரெயில்களில் இலவச பயணம் மேற்கொள்ள பாஸ் வழங்கப்படுவதால் இந்த சுற்றுலா பயணப்படி இது வரை மறுக்கப்பட்டு வந்தது. 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ரெயில்வே ஊழியர்கள் வி டுமுறை காலத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த படி வழங்கப்படவுள்ளது. ரெயில்வே ஊழியருக்கும் அவரது வாழ்க்கை துணைக்கும் இந்த சலுகை அளிக்கப்படவுள்ளது. இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு உள்ளது.

இது குறித்து ரெயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அகில இந்திய அளவிலான பயணம் மேற்கொள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த சலுகை 4 ஆண்டுக்கு ஒரு முறை நிறுத்தப்பட்டு வழங்கப்படும். அகில இந்திய எல்டிசி என்பது ரெயில்வே ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். எனினும் இலவச பாஸ் திட்டத்திலும் தொடரலாம். பாஸ் விதிமுறைகளின் படி சிறப்பு அனுமதி மூலம் அகில இந்திய எல்டிசி.யை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், சொந்த ஊர் பயணத்துக்கு எல்டிசி.யை பெற முடியாது. அந்த காலண்டர் வருடத்தில் இலவச பாஸ் சலுகையை ஒப்படைத்த பின்னரே எல்டிசி சலுகையை பெற முடியும். பள்ளி, பணி, மருத்துவ சிறப்பு பாஸ் போன்றவற்றுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. அதேபோல் குறிப்பிட்ட ஆண்டில் இலவச பாஸை பயன்ப டுத்தி முடித்துவிட்ட ஊழியர்களுக்கு எல்டிசி கிடைக்காது. ரெயில்வே சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் விருப்பத்தின்படி எல்டிசி தேர்வு செய்ய உரிமை உண்டு’’ என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.