திருச்சி: வாக்களர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநிலம்  முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சி அரசு  மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி. இவரது வீட்டில், நேற்று இரவு(05-04-24) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் ஏழுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களில் முக்கியமான ஒரு சில அமைச்சர்கள் பதவி வகிக்கும் துறைகளில் இருக்கக்கூடிய ஒபந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு பணிகளை இவர் தான் மற்ற ஒப்பந்ததாரருக்கு எடுத்து பிரித்து கொடுப்பார் என தகவல் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை முதலே வருமானவரித்துறை அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அந்த வகையில், நேற்று இரவு 7 மணி முதல் ஈஸ்வரமூர்த்தி வீட்டின் உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணம் பட்டுவாடா தொடர்பாக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் தேர்தல் வாக்குறுதி பட்டியல் வெளியிட்டபோது, அதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகர் பேசியதாவது “விரைவில் அமைச்சர் நேரு இந்த திருச்சியை விட்டு புறப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமலாக்கத் துறையும், வருமானவரித்துறையும் மிக விரைவில் அவரிடம் சோதனை நடத்தும்” என்று கூறினார்.  இந்த நிலையில், நேற்று இரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் சென்னை, நெல்லை, ஈரோடு cஉள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் சத்தியமூர்த்தி என்பவரது கட்டுமான நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.