அலகாபாத்: உத்திரப் பிரதேச மாநில அமேதி தொகுதியில் தனக்கேற்பட்ட தோல்வி குறித்து காரணமறிய, 2 நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமேதிக்கு அனுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

கடந்த 1977ம் ஆண்டு இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி போட்டியிடத் தொடங்கியதிலிருந்து, அத்தொகுதி நேரு குடும்பத்தினருக்கு செல்வாக்கான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது.

ஆனால், தற்போது நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், பாரதீய ஜனதாவின் ஸ்மிருதி இராணியிடம் 55000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் ராகுல் காந்தி.

எனவே, தோல்வி குறித்து ஆராய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூபைர் கான் மற்றும் காங்கிரசின் ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.ஷர்மா ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கே.எல்.ஷர்மா கடந்த 2009ம் ஆண்டு வரை அமேதி தொகுதியை கவனித்துக் கொண்டிருந்தவர். இந்த இருவரும் நிலவரத்தை விசாரித்து, தலைமைக்கு அறிக்கை அனுப்புவார்கள்.