திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இதன் காரணமாக, அங்கு கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்,  ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை என கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் ஆளும் கூட்டணி யான LDFக்கு ஆதரவு எம்எல்வான  நீலாம்பூர் தொகுதி எம்எல்ஏ PV அன்வர்  என்பவர்,  பாலக்காடில் நடந்த  கட்சி கூட்டத்தில் பேசும்போது,  ராகுல் காந்தி ஒரு கீழ்தரமான குடிமகன், அவர் நேரு குடும்பத்தில் பிறந்தாரா? அவருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறினார். இது சர்ச்யையை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதனப்டி, கேரள மாநிலத்தி;ல உள்ள மொத்தம் 20 தொகுதிகளிலும்  ஒரே கட்டமாக நாளை (ஏப்ரல் 26ந்தேதி)  தேர்தல் நடக்கிறது. கேரள மாநிலத்தில்  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், என்டிஏ என இங்கு மும்முனை போட்டி நடக்கிறது. எனினும், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.  அவரை எதிர்த்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி சார்பில், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா களமிறக்கப்பட்டு உள்ளார்.  இவர்களுக்கு போட்டியாக, மாநலி பாஜக தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகிறார். இதனால், அங்கு அனல்பறக்கும் பிரசாரும், அதனால் சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து பேசி இருந்தார்.பாஜகவுடன் உள்ள நெருக்கத்தால் பினராயி விஜயன் கைது செய்யப்படவில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து அங்கு அரசியல் சலசலப்புகள் அதிகரித்து உள்ளன. எதிர்க்கட்சியான பாஜகவை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிற்கும், காங்கிரசுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தை போர் தொடங்கி நடைபெற்றது வருகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,  ‘வரவிருக்கும் தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றும் காங்கிரசுக்கு வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை ‘என்றும், குறிப்பாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது காங்கிரஸ் அதனை ஆதரித்தது என்றும் ,  போதும் ராகுல் காந்தி வாயே திறக்கவில்லை என்று கூறியதுடன், ஆர்.எஸ். எஸ் கொள்கைகளுடன் காங்கிரஸ் ஒத்துப் போகிறது என்றும், சங் பரிவார் மன நிலையே ராகுல் இடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். இதன் உச்சக் கட்டமாக , ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல் வாதியே இல்லை என்றும் கடுமையாக குற்றஞ் சாட்டியிருந்தார் பினராயி விஜயன்.

பினராயி விஜயனின் இநத் பேச்சு காங்கிரசாரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி,  பினராயி விஜயன் 24 மணிநேரமும் தம்மை மட்டுமே எதிர்க்கிறார் என்றும், பாஜகவை அவர் எதிர்ப்பதே இல்லை என்றும் ,  அப்படி எதிர்த்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை மோடி அரசு சிறையில் அடைத்திருக்கும் என்றும் விஜயனை கைது செய்யாதது ஏன் ? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கிடையில், கேரள முதல்வரின் ஆதரவு எம்எல்ஏவான சி பி எம் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர், ராகுல்காந்தி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்தார்.  “நான் வயநாட்டில் வசிப்பவன், இங்குதான் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.. அவருடைய இரண்டாவது பெயரான ‘காந்தி’யோடு அவரை அழைக்கமாட்டேன்.. அவர் மிகவும் கீழ்தரமான மனிதராகி இருக்கிறார். காந்தி என்ற பெயரை உச்சரிப்பதற்குக்கூட யோக்கியதை இல்லாத ஆளாக ராகுல் மாறிவிட்டார் .  அதனால் காந்தி என்ற பெயரோடு அவரை அழைக்கமாட்டேன்.. இதை நான் சொல்லவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக நாடே இதைத்தான் சொல்கிறது.

. நேரு குடும்பத்தில் இவரைப் போன்ற ஒருவர் இருக்க முடியுமா? நேரு குடும்பத்தில் பிறந்த ஒருவரால் அப்படி பேச முடியுமா? (பினராயி விஜயன் குறித்து ராகுல் காந்தி பேசியது) எனக்கு மிகப் பெரிய சந்தேகம் உள்ளது..

என்னைக் கேட்டால் ராகுல் காந்திக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவேண்டும்.. நேருவின் பேரனாக வளர ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை.. அவர் பிரதமர் மோடியின் ஏஜெண்ட் என்கிற கோணத்திலும் யோசிக்க வேண்டும்” என்றும், கேரளத்துக்கு வந்து பாஜகவுக்கு ஆதரவு நிலைபாட்டை ராகுல் காந்தி எடுத்திருப்பது அவரது அரசியல் பக்குவமற்ற தன்மையையே காட்டுகிறது என்று  கூறினார்.

இந்த பேச்சு மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.  மேலும்,   கேரள மாநில காங்கிரஸ் தலைவர், நேரு குடும்பம் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் தகாத மொழியை பயன்படுத்தி அன்வர் பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ஹாசன், அன்வர் முதல்வர் பினராயி விஜயனின் தற்கொலை படையாக செயல்படுவதாகவும் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பேசக்கூடாத விஷயங்களை பேசியதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார். தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்தே ராகுல் காந்தியை விமர்சிப்பது மட்டும் தான் பினராயி விஜயனின் பிரதான லட்சியமாக இருந்தது. இது பா.ஜ.க-வுடன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று  குற்றம் சாட்டினார்.

கேரளாவில்  நாளை (26ஆம் தேதி)  வாக்குபு்பதிவு நடைபெற உள்ள நிலையில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது .