காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்தார்.

கர்நாடக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த மடத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு மடாதிபதி ஆசி வழங்கினார்.

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி முருகா ஷரண், ராகுல் காந்திக்கு நெற்றியில் விபூதி பூசி லிங்க தீட்சை வழங்கினார்.

மேலும், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போல் ராகுல் காந்தியும் இந்த நாட்டின் பிரதமராக வருவார் என்று வாழ்த்தினார்.

இந்த சந்திப்பின் போது 20 க்கும் மேற்பட்ட சாமியார்கள் உடனிருந்தனர்.

அவர்களுடன் பேசிய ராகுல் காந்தி, பசவண்ணாவை பற்றி சில காலமாக படித்து வருகிறேன். நான் இங்கு இருப்பது பெருமையாக உள்ளது. “இஷ்டலிங்கம் மற்றும் சிவயோகம் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகக் கற்றுக்கொடுக்கும் ஒருவரை எனக்கு அனுப்பினால், நான் பலனடையலாம்” என்று ராகுல் காந்தி கூறினார்.

லிங்காயத் மடங்கள் பெரும்பாலும் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக லிங்காயத் தலைவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் ராகுல் காந்திக்கு மடாதிபதி சிவமூர்த்தி முருகா ஷரண் தீட்சை வழங்கி ஆசீர்வதித்தது கர்நாடக பாஜக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.