கொல்கத்தா

திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பேசி வருவதாக ராகுல் காந்தி கூறியுல்ளார்.

வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள அணியினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

அவரிடம், “மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியைக் கூட விட்டுக்கொடுக்க முன்வராத திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்குக் காங்கிரஸ் கட்சி ஏன் முக்கியத்துவம் அளிக்கிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ராகுல் காந்தி,

“எங்கள் கட்சியும், மம்தா பானர்ஜியின் கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறவில்லை. இரு தரப்பில் இருந்தும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும்” 

என்று பதில் அளித்துள்ளார்.