டில்லி

மோடி அரசே மல்யுத்த வீரர்களின் நிலைக்குப் பொறுப்பு என ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரிப் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களைக் கங்கையில் வீசுவோம் என்று அறிவித்து போராடினர். இதையொட்டி அவர்களின் போராட்டம் முடக்கப்பட்டது.

இந்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுகுறித்து தன்னுடைய டிவிட்டரில்

“இந்திய மகள்கள் நீதி கேட்டுக் கதறி அழுகின்றனர் “

“இந்தியாவுக்கு 25 சர்வதேச பதக்கங்களைக் கொண்டு வந்த 5 மகள்கள் நீதி கேட்டு தெருவில் கதறி அழுகின்றனர்”

“15  கொடூரமான பாலியல் குற்றச்சாட்டுகளுடன் எம்.பி., பிரிஜ் பூஷன் பிரதமரின் பாதுகாப்பில் உள்ளார்”

இந்திய மகள்களின் இந்த நிலைக்கு மோடியின் பாஜக அரசே காரணம்.”

எனப் பதிந்துள்ளார்.