டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கி வருகிறது. இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கருப்பு உடை அணிந்து கலந்துகண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை இடையில் மடக்கிய காவல்துறையினர்,  ராகுல்காந்தி உள்பட அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அதுபோல, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக செல்ல கிளம்பினர். இதனையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பிரியங்கா நடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் அவர்களை காவல்தறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டது குறித்து, பிரியங்கா கூறுகையில், எதிர்க்கட்சிகளை நசுக்கி விட முடியும் என பா.ஜ., நினைக்கிறது. பணவீக்கத்தை அமைச்சர்கள் பார்க்க மறுக்கின்றனர். எனவே, அவர்களுக்கு காட்டுவதற்காக நாங்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி சென்றோம். நாட்டின் சொத்துகளை, தனது நண்பர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துவிட்டார் எனக்கூறினார்.

கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போலீஸ் லைன்ஸ் கிங்ஸ்வே முகாமில் தங்க வைக்கப்பட்டனர்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  அதில் மனீஷ் திவாரி எம்.பி., “குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றோம். அப்போது விஜய் சவுக் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டோம். கிங்க்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக, காங்கிரஸார் போராட்டத்தினை ஊகித்து டெல்லி நிர்வாகம் நகரில் பெருந்திரளாக மக்கள் கூட தடைவிதித்தது. காங்கிரஸ் போராட்டம் நடத்தவும் அனுமதி மறுத்தது. இதனை சுட்டிக்காட்டியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை நடுரோட்டில் வைத்து கைது செய்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஏதோ 4, 5 பேரின் நலனைக் காப்பதில் மட்டுமே அக்கறையுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு செங்கல்லாக நாங்கள் உருவாக்கி கட்டமைத்துள்ளோம். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் அத்தனையையும் சிதைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் ஒரே கொள்கை மக்கள் பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகம் மரணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது.

அரசுக்கு எதிராக யாராவது குரல் உயர்த்தினால் அவர்கள் மீது அப்பட்டமாகவே தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. இங்கே 4பேர் இருந்து கொண்டு சர்வாதிகாரம் செய்கின்றனர்” என்று விமர்சித்தார்.