காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5 நாள் பயணமாக காத்மாண்டு சென்றுள்ளார்.

ராகுல் காந்தியின் நண்பரும் சி.என்.என். செய்தி நிறுவனத்தின் முன்னாள் செய்தியாளருமான சும்நிமா உதாஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை 4:40 மணிக்கு காத்மாண்டு சென்ற அவர் மாரியாட் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

நாளை நடைபெற இருக்கும் தனது மகள் சும்நிமா உதாஸ் திருமணத்திற்காக தனது அழைப்பின் பேரில் ராகுல் காந்தி காத்மாண்டு வந்திருப்பதாக சும்நிமா உதாஸின் தந்தையும் மியான்மருக்கான முன்னாள் நேபாள தூதருமான பீம் உதாஸ் தெரிவித்துள்ளார்.

திருமணத்தை தொடர்ந்து வரும் 5 ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

2018 ம் ஆண்டு திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு வழிபாட்டுக்கு செல்லும் போது காத்மாண்டு சென்ற ராகுல் காந்தி தற்போது மீண்டும் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராகுல் காந்தியின் இந்த பயணத்தின் போது அரசியல் ரீதியிலான சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்தியாவில் இருந்து பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், ராகுல் காந்தியுடன் அவரது நண்பர்களும் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.