திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து இன்று காலை அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து  வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2வது தொகதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள்.

இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ள ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா வுடன்,  கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து கேரளாவில்  பிரியங்காவுடன் வாகன பேரணி  நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் வாகன பேரணி மற்றும் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, பொதுச்செயலாளர்கள் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில கட்சித்தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ராகுல் வயநாடு வருவதையொட்டி,  அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.