டில்லி

பிரதமர் மோடிக்காக ஆரம்பிக்கப்பட்ட நமோ டிவியில் ஏராளமான குளறுபடிகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமோ டிவி என்பது முழுக்க முழுக்க பிரதமர் மோடியின் பேச்சுக்களையும் பேரணிகளையும் ஒளிபரப்ப தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனல் ஆகும்.   நரேந்திர மோடி என்னும் பெயரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு இந்த டிவி பெயர் சூட்டப்பட்டுள்ளது.   கடந்த வாரம் இந்த டிவி தொடங்கப்பட்டதால் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக இந்த டிவி மீது புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த டிவி குறித்து செய்தி ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்தி விவரம் வருமாறு :

புதியதாக தொடங்கப்பட்ட நமோ டிவி குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு தகவல் மற்றும் ஒளிபரப்பு அதிகாரி, “சில கேபிள் ஆபரேட்டர்கள் பாகிஸ்தான் மற்றும் சீன சேனல்களை அனுமதி இன்றி சில இடங்களில் ஒளிபரப்பி வருகின்றனர்.   ஆனால் இந்திய தொலைக்காட்சி ஒன்று அனுமதி இன்றி ஒளிபர்ப்பபடுகிறது.    இவ்விதத்தில் நமோ டிவி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

நமோ டிவி ஒளிபரப்பு உரிமத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காமலேயே ஒளிபரப்பை தொடங்கி உள்ளது.   இதனால் இந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை.  அத்துடன் இது எந்த அலை வரிசையில் ஒளிபரப்பப் பட்கிறது என்பதோ செய்தி தொலைக்காட்சியா அல்லது மற்ற தொலைக்காட்சியா போன்ற விவரங்க்ளும் தெரியவில்லை.

பல சேனல்கள் அனுமதி கிடைக்கும் முன்பே தொடங்கப்பட்டுள்ளது.   ஆனால் அனுமதிக்கு விண்ணப்பிக்காமலே நமோ டிவி  தொடங்கப்பட்டுள்ளது   அது மட்டுமின்றி எங்கள் துறையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இது குறித்த விவரங்கள் தெரியாத நிலை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி பிரிண்ட் செய்தி ஊடகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரக செய்தி தொடர்பாளரிடம் கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.    அத்துடன் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நளின் கோலி இது குறித்து கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவர் அனில் மாளவியாவை அணுகுமாறு கூறி உள்ளார்.  அனில் மாளவியா எந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் ஏற்க மறுத்துள்ளார்.