சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிப்பவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதிக்காக இயந்திரம் பொருத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வாக்காளர்கள், வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தியவுடன், அவர் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், இயந்திரத்தின் உள்புறத்தில் உள்ள கண்ணாடி வழியே தெரியும்.

ஒரு சீட்டில் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் சின்னத்தை வாக்காளர் பார்க்க முடியும். ஒரு சில நிமிஷங்களுக்கு இந்தச் சீட்டு அப்படியே இயந்திரத்தில் நிற்கும். அதன்பிறகு கீழே சென்றுவிடும்.
இதன்பின், வாக்களிக்க வரும் அடுத்த வாக்காளர் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாரோ அந்தச் சின்னம் இயந்திரத்தின் உள்புறத்தில் தெரியும்.

வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளருக்குரிய சின்னத்தை மட்டுமே பார்க்க முடியும். அவருக்கு தனியாக ஒப்புகைச் சீட்டோ அல்லது வேறு சீட்டுகளோ கையில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.