சென்னை:
1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.